×

கேரளா, ஒடிசா, மணிப்பூர், ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் குஜராத் ஆகிய 7 ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் நியமனம்: ஒன்றிய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை

புதுடெல்லி: கேரளா, ஒடிசா, மணிப்பூர், ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் குஜராத் ஆகிய 7 மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமனம் செய்து ஒன்றிய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உயர் நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றத்திற்குமான நீதிபதிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்ட ஒற்றை அமைப்பு கொலிஜியம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இக்குழுவில், மூத்த நீதிபதிகள் 4 பேர் இடம் பெறுவர். இக்குழுவே கொலிஜியம் என அழைக்கப்படுகிறது. கொலியத்தில் இடம் பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில் ஒன்றிய அரசு, புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. இதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அவர்கள் பதவியேற்பது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், காலியாக உள்ள தலைமை நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான கொலிஜியத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. அப்போது, கேரளா, ஒடிசா, மணிப்பூர், ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத் ஆகிய 7 உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளை ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சகத்துக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இதில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சுனிதா அகர்வாலை குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், குஜராத் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக இருக்கும் ஆஷிஸ்-ஜே-தேசை கேரளா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதியான சுபாசிஸ் தலபத்ராவை ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான ஷித்தார்த் மிருதுலை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான திராஜ்சிங் தாகூரை ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான தேவேந்திரகுமார் உபாத்யாவை மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி அலோக் அரதியை தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் கொலிஜியம் பரிந்துரை செய்து அனுப்பி வைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த 7 மாநில புதிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கும்பட்சத்தில் உடனடியாக அவர்கள் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் பொறுப்பு ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று உச்சநீதிமன்றத்தில் காலியாக இருக்கும் நீதிபதிகளின் இடங்களுக்கு புதிய நீதிபதிகளை தேர்வு செய்யவும், அதற்கான பரிந்துரைகளை அனுப்பி வைக்கவும் அடுத்த ஓரிரு நாட்களில் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு கூட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

The post கேரளா, ஒடிசா, மணிப்பூர், ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் குஜராத் ஆகிய 7 ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் நியமனம்: ஒன்றிய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : IC Court ,Kerala ,Odisha ,Manipur ,Andhra Pradesh ,Maharashtra ,Telangana ,Gujarat ,Union ,New Delhi ,Andhra ,Gujarat High Courts ,Dinakaran ,
× RELATED கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு;...